திங்கள், 10 செப்டம்பர், 2012

உயர்திரு பட்டா கத்தி வீரர் ஞாநி அவர்களே


என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய  மூத்த பத்திரிக்கையாளர்,  அரசியல் விமர்சகர்,  எழுத்தாளர்  திரு ஞாநி அவர்களே,  உங்களை போன்ற பட்டா கத்தி வீரர்களின் செய்திகளை வெளியிட தமிழகத்தின்  உண்மையான நடுநிலை இதழ்/தொலைக்காட்சி   புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் உள்ளன.  அட்டைக்கத்தி வீரன் வைகோவின் செய்தியை வெளியிட அப்படி வேற எதுவும் நடுநிலை ஊடகங்கள் இல்லையே இந்த இந்திய திருநாட்டில்.

தினமலம் போன்ற தமிழகத்தின் சாபகேட்டு பத்திரிக்கைக்கு கல்லில்(சிலை) இருந்து பால் வடிந்தது, ஒரு ஆப்பத்தை சாய் பாபா இரண்டாக்கினார் என்ற ஆன்மிக குப்பைகளையும்,  வாலு  நடிகர் காலு நடிகையின் கையை பிடித்து இழுத்து  கலாட்டா பண்ணினார் என்று காம கதைகளை வெளியிடவும் மட்டுமே நேரமும் இடமும் உள்ளது.   ndtv/headlines today போன்ற வட இந்திய ஆங்கில ஊடகங்களுக்கு தமிழ்நாடு என்றால் அது எதோ துபாய் பக்கம் தூத்துக்குடி பக்கம் உள்ள எதோ ஒரு ஊரு. அவர்களுக்கு "who looks sexy priyanka chopra or katrina kaif?"  என்று   கண்டுபிடிக்கவே  நேரம் இல்லை. அப்படியே மிஞ்சி போய் எதோ கொஞ்சம் நேரம் கிடைத்தால் முகமுடி போன்று உலகமகா காப்பியங்களின் திரை விமர்சனங்களையும், நீ தானே என் பொன்வசந்தம் போன்ற சமுக சீர்திருத்த, புரட்சி படைப்புகளின் பாடல் விமர்சனங்களையும் regional section பகுதியில்  போட மட்டும்தான்  நேரம்  இருக்கிறது. மக்கள் தொலைக்காட்சி  போய் பாருங்கள் இராமதாஸ் பற்றிய செய்திகள் இருக்கும். தெருவில் போய் பாருங்கள் வைகோ எதோ ஒரு மூலையில் தொண்டை கிழிய கத்திக்கொண்டு இருப்பார்.அதாவது உங்கள் பார்வையில்  அவரின்  அரசியல் ஆதாரத்திற்காக மட்டுமாவது எதாவது அட்டகத்தி வசனங்களை பேசிகொண்டிருப்பார். உலகம் உருண்டை ஞாநி அவர்களே. பின்னாலும் முன்னாலும் பக்கவாட்டிலும் திரும்பி பாருங்கள், புதிய தலைமுறையில் மட்டுமே தலையை நுழைத்து தேடிக்கொண்டு இருந்தால் கிடைக்காது

என்னை போன்றவர்கள் தேடித்தேடி  பார்த்தால், நடுநிலையாக  இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அல்லது விருப்பம் கொண்ட   வைத்தி மாமா போன்றோரின் ஊடகங்களில் எதாவது ஒரு மூலையில் வைகோ என்ற அட்டைக்கத்தி வீரனின் செய்திகள் இடம் பெற்று இருக்கும்.  நீங்கள் தமிழகத்தின் ஒரே நடுநிலை ஊடகம் புதிய தலைமுறையில் மட்டுமே பார்த்தால் எப்படி கிடைக்கும். அப்படியே அவர்கள் வைகோவை தேடி சென்று அவர்கள் செய்தி சேகரித்து வெளியிட்டால் உங்களை போன்ற நடுநிலையார்கள் எங்கே போய் பேசுவீர்கள்? வெளிநாட்டில் இருந்தாலும், நானும் நீங்கள்  நடுநிலை நடுநிலை சொல்கிறீர்களே என்று புதிய தலைமுறையின் காணொளிகளை youtube முழுவதும்  கடந்த ஒருவருடமாக தேடிவிட்டேன். தன்மான தலைவன், முத்தமிழ் அறிஞர், மூதறிஞர், செம்மொழிபுலவர் கலைஞர் கருணாநிதியின் அக்கிரமங்களையும்,  புரட்சி தலைவி, தமிழகத்தின் ஒரே அம்மா, செல்வி கொடநாட்டு கோமளவல்லி ஜெயலலிதாவின் கூத்துகளையும் காணவே இல்லை.

புதிய தலைமுறை தொலைக்காட்சி கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்தும், அதன் போராட்டம் பற்றியும் செய்திகளை தமிழக பாசிச அரசுக்கு எதிராக செய்து வெளியிட தயாராக இருக்கிறதா? இருந்தால் கேட்டு சொல்லுங்கள். நான் வைகோவை புதிய தலைமுறை செய்தி நிலையத்திற்கு வந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டத்தை ஆதரித்து  ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேலாகவும் தொண்டை கிழிய பேச ஏற்பாடு பண்ணுகிறேன்.அப்படி பேசும் போது  தண்ணீர் கூட கொடுக்க வேண்டாம், அவரே ஏற்பாடு செய்து கொள்வார்.  அவருக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்து கொடுத்து பிக் அப் பண்ணவும் வேண்டாம். அவரே தன் சொந்த செலவில் வந்து பேசுவார்.

நீங்கள் தயாரா ஞாநி அவர்களே?.


பின்குறிப்பு: ஞாநி அவர்களே உங்களின் மீது என்னைபோன்ற ஒரு சில இளைஞர்கள் மிகுந்த மதிப்பும்,  நீங்கள் கூறும் நல்ல கருத்துகளை பகுத்தறிந்து செயல்படவும் இருக்கிறோம். அதை கெடுத்துவிட வேண்டாம்.

சனி, 1 செப்டம்பர், 2012

யார் போராளி ?


கணக்கிலடங்காத  ஊழல்களும்   எண்ணிலடங்கா முறைகேடுகளும் முற்றிய இந்தியாவில் யார் போராளி என்ற கேள்வி எல்லாருடைய (ஒரு சிலருடைய மனதிலாவது) இருக்கலாம். அமீர்கான் ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) அனுப்பினால் போராளி என்றார். ஊடகங்களும் மற்றும் பலரும் அண்ணா ஹசாரே ஜந்தர் மந்திரில் உண்ணாவிரதம் இருக்கும் போதோ அல்லது அவருக்கு ஆதரவாகவோ ஒரு மெழுகுவர்த்தி ஏந்துபவரும் போராளியே என்றன(ர்). பெரும்பான்மையான பத்திரிக்கைகளும் மற்றும் திரைப்பட பார்வையாளர்களும் ஷங்கர் போன்ற இயக்குனர்கள் வியாபார ரீதியில் சில சமுக பிரச்சினைகளை படமாக்கினால் அவர்களும் போராளி என்றன(ர்). பேஸ்புக், ட்விட்டர் மற்றும் சமூகவலைதளங்களில் பதிவிடுவது, லைக் பண்ணுவது, ஷேர் பண்ணுவது போன்ற செயல்களால் பலர் (என்னையும் சேர்த்துதான்) போரளியானோம். வினவு என்ற வலைத்தளமோ நக்சல் பாரி பாதையில் தெருவீதியில் போராடுபவனும், தான் கொண்ட கொள்கையின்  பால் வழிதவறாமல் செயல்படுவனும் மட்டுமே போராளி என்கிறது.

இப்போது நம்ம கதைக்கு வருவோம்.  அண்மையில் நீயா நானா நிகழ்ச்சியில் பேசிய இளங்கோ கல்லணை என்ற எழுத்தாளன் தன்  ஐந்து வயது மகன் (i am selfish for my own reason) என்னுடைய சொந்த காரணங்களுக்காக நான் ஒரு சுயநலவாதியாக இருக்கிறேன் என்பதை இன்றைய இந்தியா  எவ்வாறு இருக்கிறது என்பதற்கு  அடையாளமாக எடுத்துகொள்ளலாம். நான் பேசிய அல்லது பழகிய பலர் இளம் வயதினர் (ஏனெனில் நானும்).  அவர்கள் அனைவரும் தன் வேலை, தன் குடும்பம், தன் முன்னேன்றம் என்ற நிலையை தாண்டி சிந்திக்க நேரமே இல்லை. அப்படியே இருந்தாலும் கிரிக்கெட், திரைப்படம் போன்ற பொழுது போக்கு அம்சங்கள் அவர்களை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து கொண்டன. பிறகு எங்க போராளியாக ஆவது? ஆனாலும் எப்படியாவது போராளியாக வேண்டுமே.? எங்கே அதற்கான வழிமுறை இன்றைய இந்தியாவின் புதிய தலைமுறைக்கு ?

வணிக மேலாண்மைவியல் (எம்.பி.ஏ) படித்த பெண்மணிக்கு பாஸ்போர்ட்  விண்ணப்பம் எப்படி செய்வது என்று தெரிய வில்லை. பொறியியல் படித்து, தகவல் தொழிநுட்ப துறையில் பொறியாளனாக வேலை செய்யும், இருபத்தி ஏழு வயது நிரம்பிய (சில பல முறை ஓட்டு போட்ட) ஒரு இளைஞனுக்கு    குடியரசு தலைவர் எவ்வாறு தேர்தெடுக்க படுகிறார் என்று தெரிய வில்லை. சமூக பார்வையாளர்கள் இந்த மெத்த படித்தவர்கள் ஓட்டு போடாத வராத காரணத்தினால் தான் கேடுகெட்ட தலைவர்களை முதன்மை அமைச்சர்களாகவும், பாராளுமன்ற , சட்டமன்ற  உறுப்பினர்களாகவும்,தேர்ந்து எடுக்க படுகின்றனர் குற்றம் சாட்டுகின்றனர்.  ஆனால் நான் கூறுகிறேன் "அந்த ஓட்டை போடுவதற்கு  முன்பு அரசியல் பற்றிய அடிப்படை ஞானமும், கருத்துக்களும், அதைப்பற்றி நண்பர்கள், உறவினர்கள்  மற்றும் குடும்பத்தினருடன் பேசினாலே " நீங்களும் போராளியே. (எப்படிப்பட்ட பேச்சுபேச வேண்டும், எந்த மாதியான கருத்தாக்கம் இருக்க வேண்டும் என்பது வேற தனிக்கதை).   குறைந்த பட்சம் எது அரசியல் என்றும், அரசியல் பற்றி படிப்பதும், பேசுவதும், தெரிந்து வைத்து இருப்பதும்  போராளிக்கான அடிப்படை குணங்கள் என்று நான் முடிக்கிறேன்.